மெரீனா பீச்சைத் தொடர்ந்து திருவாரூர் கமலாலய குளம்... ஸ்டாலின் ரிலாக்ஸ் 'ப்ளேஸ்'
சென்னை மெரீனா பீச்சில் காற்று வாங்கிய ஸ்டாலின் திருவாரூர் கமலாலய தெப்பக்குளத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது அரசியல் பரபரப்புக்கு இடையே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக கமலாலய தெப்பக்குளத்தில் அமர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மெரீனா கடற்கரையில் அமர்ந்து தனது மனைவியுடன் காற்று வாங்கிய அவர், மற்றொரு நாள் திமுக கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கடற்கரையில் ஆலோசனை நடத்தினார். இந்த இரண்டு புகைப்படங்களுமே வைரலானது.
குறை கேட்ட ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி திருவாரூர். இந்த தொகுதிக்கு விசிட் செய்யும் ஸ்டாலின், மக்களை சந்தித்து குறை கேட்டு வருகிறார். அப்போது அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
திருவாரூர் கமலாய செல்ஃபி
தனது அத்தை வீட்டில் தங்கி ஓய்வெடுத்த ஸ்டாலின் நேற்றிரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் கமலாலய தெப்பக்குளத்தில் அமர்ந்து பேசினார். அப்போது செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
|
மலரும் நினைவுகள்
தெப்பக்குளத்தின் அழகை ரசித்த ஸ்டாலின், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருவாரூரின் பெருமைமிக்க கமலாலயக் குளத்தருகில் அமர்ந்த போது, என் சிறுவயது மலரும் நினைவுகள் கண் முன்னே வந்து நின்றது என்றும் பதிவிட்டுள்ளார்.
மனைவியுடன் மெரீனாவில் ரிலாக்ஸ்
கடந்த வாரம் ஒருநாள் திடீரென மெரீனா கடற்கரைக்கு சென்று காற்று வாங்கினார். சென்னை மாநகரில் வெப்பம் அதிகமாக இருப்பதால் கடற்கரையோரம் வந்து ரிலாக்ஸ் செய்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அரசியல் பரபரப்பு
அதிமுகவில் அணிகளை இணைக்க அமைச்சர்கள் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, அன்றைய தினம் ஸ்டாலின் நேற்று இரவு மெரீனா கடற்கரைக்கு வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள் இருவருடன் திடீர் ஆலோசனை நடத்தினார். முதன் முதலில் வெளிப்படையாக கட்சி நிர்வாகிகளுடன் பொது இடத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய புகைப்படம் அன்றைய தினம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ரிலாக்ஸ் மூடு
நமக்கு நாமே பயணத்தின் போது தொண்டர்களுடன் எளிதாக பழகினார் ஸ்டாலின். செயல்தலைவர் ஆன பின்னர் நிர்வாகிகள் எளிதில் நெருங்கும் தலைவர் என்று பெயரெடுக்கும் வகையில் அவர்களுடன் பொது இடங்களில் பேசி வருகிறார். தண்ணீர் அருகில் அமர்ந்து அவர் ரிலாக்ஸ் செய்வதைப் பார்த்தால் ஏதாவது ஜோதிட ரீதியான காரணம் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.