திராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்... ஸ்டாலின் விளக்கம்!
திமுக திராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பது போன்று பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக அந்த கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : திராவிட நாடு உருவாக வேண்டும் என்று தான் குரல் கொடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுத் திடலை பார்வையிட்ட பின்னர் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தென்மாநிலத்தில் திராவிடநாடு கோரிக்கை வலுப்பெற்று வரும் சூழல் நிலவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின் வந்தால் வரவேற்பேன், வரும் என்ற நம்பிக்கையில் தான் நானும் இருக்கிறேன் என்றார்.
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மு.க.ஸ்டாலின் திராவிட நாடு வந்தால் வரவேற்பேன் என்று கூறியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவால் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை மீண்டும் உயிர்பெற்று வருகிறதோ என்று அரசியல் நோக்கர்கள் கருதினர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திராவிட நாடு கொள்கையை பொறுத்தவரை அண்ணா அன்றே அதனை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் திமுக திராவிட நாடு கேட்டது போலவும் அதற்கு குரல் கொடுப்பது போலவும், ஆதரவு தெரிவிப்பது போலவும் மிகப்பெரிய பிரச்சாரத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.