மத்திய நிதி ஆணையத்தின் வரம்புகளில் திருத்த வேண்டும்... பிரதமர், 10 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
மத்திய நிதி ஆணையத்தின் வரம்புகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 10 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மத்திய நிதி ஆணையத்தின் வரம்புகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 10 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பஞ்சாப், டில்லி, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாவது : மாநிலங்களின் நிதிதன்னாட்சியை பாதிக்கும் 15வது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பு குறித்த முக்கியமான விஷயங்களை அரசுகள் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு சமமான மற்றும் நியாயமான நிதி பகிர்வு கிடைப்பதற்கு இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வு வரம்புகள் உதவி செய்யாது.
மாநிலங்களை ஆலோசிக்காமல் ஆய்வு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் இழப்பு ஏற்படும். ஆய்வு வரம்பு 4(ii)ன்படி மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி பங்கீடு செய்யலாம், ஆய்வு வரம்பு 5ல் " 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு குறித்து ஆணையம் பரிந்துரை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 2 ஆய்வு வரம்புகளும் தமிழகம் போன் முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி கிடைப்பதில் ஒட்டு மொத்தமாக மோசமான தாக்கத்தை உருவாக்கும். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்திற்கு கிடைக்கும் நிதி தலைகீழாக குறையும். மாநில ஜிஎஸ்டி கவுன்சிலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாற்றியமைக்க வேண்டும். புதிய ஆய்வு வரம்பால், மத்திய அரசின் வருவாயிலிருந்து சமமான, நியாயமான நிதி கிடைக்காது.
எனவே மாநிலங்களின் தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின்ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜிஎஸ்டி கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து திருத்தியமைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு தர வேண்டும் என்று மாநில முதல்வர்களை கேட்டுக் கொள்கிறேன். மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிப்பகிர்வினால் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அந்த அநீதி மூலம் மாநிலங்களில் மனக்குறையும் ஏற்படாமல் இருக்க நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பில் திருத்தங்கள் கொண்டு வருவது மட்டுமே ஒரே வழி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.