ஆர்.கே.நகர் தோல்வி- அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுசூதனன் திடீர் போர்க்கொடி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மதுசூதனன் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு இதுவரை முக்கிய அமைச்சர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், பாஜக சார்பில் கரு.நாகராஜன், தினகரன் அணி சார்பில் தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
அமோக வெற்றி
இதில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுவிட்டார். திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன. ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு சில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.
முதல்வருக்கு மதுசூதனன் கடிதம்
இந்நிலையில் அதிமுக சார்பில் அதுபோன்ற எந்த ஒரு ஆலோசனையும் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் மீது நடவடிக்கையும் இல்லை
அதில் ஆர்.கே.நகர் தோல்வி குறித்து இதுவரை ஆலோசனை நடத்தாதது ஏன்?. ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. ஆர்.கே. நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம். அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முக்கிய அமைச்சர்கள் வாக்குவாதம்
அதிமுக இணைந்த பிறகு, ஆர்கே நகர் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்த வேண்டாம் என்று அதிமுக ஆட்சி மன்ற கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. ஏற்கெனவே ஓபிஎஸ் அணியை தனித்தே பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்தும் நிலையில் மதுசூதனன் முதல்வருக்கு எதிராக திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.