குப்பைமேட்டில் 24 மணி நேரம் இருக்க முடியுமா.. மாநகராட்சி ஆணையருக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் அதிரடி!
சென்னை: சென்னை கொடுங்கையூரில் விதிமுறைகளை மீறி குப்பை கொட்டும் சென்னை மாநகராட்சியின் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த குப்பைக் கிடங்கில் குடிசை போட்டுத் தருகிறோம், சென்னை மாநகராட்சி கமிஷனரால் அங்கு 24 மணி நேரம் வசிக்க முடியுமா என்றும் நீதிபதிகள் ஆவேசமாக கேட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் எழில் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் உட்பட பலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அதில், 1970-ம் ஆண்டு முதல் எழில் நகரில் குடிசை போட்டு வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் நிலத்துக்கு சென்னை மாவட்ட கலெக்டர் பட்டாவும் வழங்கியுள்ளார். எங்கள் குடியிருப்புக்கு அருகே மாநகராட்சி குப்பை கொட்டும் இடம் உள்ளது.
இந்த நிலையில், எங்கள் சங்க உறுப்பினர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும், எங்கள் நிலத்துக்கு அருகே குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த குப்பைகளை எரிக்கவும் செய்கின்றனர். இதனால், குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே, எங்கள் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டவும், எங்கள் இடத்தில் குப்பை கொட்டவும் சென்னை மாநகராட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நீதிபதிகள் கோபமாக பேசினர். அவர்கள் கூறுகையில், குப்பை கொட்டும் பகுதிக்கு அருகே வசிக்கும் மக்கள் படும் அவதிகள் இந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அதனால், அந்த மக்களின் கஷ்டங்களை தெரிந்து கொள்ள, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, குப்பை கொட்டும் இடத்துக்கு அருகே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அதில் அவரை குடியிருக்க சொல்ல வேண்டும். அல்லது ஒரு நாற்காலியை கொடுத்து உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். அவரால் 24 மணி நேரம் அந்த இடத்தில் இருக்க முடியுமா? மாநகராட்சி ஆணையர் விரும்பினால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு வீடு கூட கட்டித் தருகிறோம் என்று கோபமாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் நீதிபதிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். அதில், இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகளில், எதையெல்லாம் அமல்படுத்தப்பட்டுள்ளது? எவையெல்லாம் அமல்படுத்தவில்லை? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் விரிவான பட்டியல் ஒன்றை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.