கிரீன்பீஸ் இந்தியா சொசைட்டியின் பதிவை ரத்து செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை: என்ஜிஓ நிறுவனமான கிரீன்பீஸ் இந்தியா சொசைட்டியின் பதிவை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எட்டு வார கால இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பதிவை ரத்த செய்ததற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், கிரீன்பீஸ் நிறுவனத்திற்கான பதிவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கிரீன்பீஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையைப் பிறப்பித்தது.
கிரீன்பீஸ் நிறுவனத்தின் பதிவை மத்திய அரசு ரத்து செய்தது இது 4வது முறையாகும். அதேபோல நான்கு முறையும் கோர்ட்டுக்குப் போய் தடை உத்தரவு வாங்கியுள்ளது கிரீன்பீஸ். இதுகுறித்து கிரீன்பீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கற்பனையான, பொய்யான, புனைவு வழக்கை கிரீன்பீஸ் மீது மத்திய அரசு தொடர்ந்து சுமத்தி வருகிறது.
தேசிய நலன்களுக்கு எதிராக நாங்கள் நடந்து வருவதாக மத்திய அரசு கூறுவது கற்பனையானது, தவறானது, உண்மையற்றது என்று அந்த நிறுவனத்தின் இணை செயல் இயக்குநர் வினுதா கோபால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications