சுவாதி கொலை வழக்கு: ஹைகோர்ட் கெடு இன்றுடன் முடிந்தது.. இதுவரை போலீஸ் நடத்திய விசாரணை முழு விவரம்
சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க ஹைகோர்ட் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று காவல்துறை வட்டாரங்கள் கூறிய தகவல்கள் கசிந்துள்ளன.
போலீசார் இதுவரை எடுத்த நடவடிக்கையில் ஹைகோர்ட் திருப்தியடையாவிட்டால் வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
ஹைகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சென்னை போலீஸ் கமிஷனர் நேரடியாக இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு வருகிறார்.
ஒரு வாரம்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சுவாதி, மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரம் ஆகப்போகும் நிலையிலும் குற்றவாளி பிடிபடவில்லை. இதுவரை காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் கூறிய தகவல்கள் பின்வருகின்றன.
தனிப்படைகள்
சுவாதி கொலை குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழு, பெங்களூர் மற்றும் மைசூரில் முகாமிட்டுள்ளது. மற்றொரு குழு, அவரின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர்களிடம் விசாரணை நடத்தியது.
நூறுக்கும் மேல்
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில், சிறப்பு விசாரணை குழு 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. இதில் 20 பேரை சந்தேகப்படும் நபர்கள் பட்டியலில் கொண்டு வந்துள்ளது.
இருவரிடம் தீவிர விசாரணை
செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அந்த 20 பேரில் 2 பேர் மீது போலீசாருக்கு அதிகப்படியான சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை கஸ்டடியில் வைத்து உரிய வகையில் போலீசார் விசாரித்தனர்.
தலைகீழ்
புதன்கிழமை நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கஸ்டடியில் விசாரிக்கப்பட்ட நபர்களுக்கு கொலையில் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. தடயங்களுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது தெரியவந்தது.
காரணம் என்ன
"பணம், சொத்து லாபத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. பகைதான் கொலைக்கு காரணம். ஆனால் இந்த பகை ஏன் ஏற்பட்டது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தெரியவந்தால் குற்றவாளியை பிடித்துவிடலாம்" என்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.
பின்தொடர்ந்த மர்ம நபர்
விசாரணையில் நேரடியாக தொடர்புபடாத ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், "சுவாதியை பல நாட்களாக பின் தொடர்ந்து தொல்லை தந்த நபர், கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. பின்தொடர்ந்த நபர் குறித்து சுவாதி குடும்பம் போலீசில் புகார் அளித்திருந்தால் இக்கொலையை தடுத்திருக்கலாம், என கருதுகிறோம்" என்று கூறுகிறார்.
நண்பர், கார் டிரைவர்
சுவாதியின் சடலம் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கு சென்று கதறி அழுத ஒரு நண்பர் மற்றும் சுவாதி கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் அவரது குடும்பத்தாருடன் தகராறு செய்த ஒரு கார் டிரைவர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் இல்லை என போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர்.
பேஸ்புக் உரையாடல்
சுவாதியின் பேஸ்புக் சாட்டிங் உரையாடல்களை போலீசார் சோதித்து பார்த்தனர். அதில் சில தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உருவப்படம்
சிசிடிவி காமிராக்களில் இருந்து பெறப்பட்ட வீடியோக்கள் தெளிவாக இல்லை என்பதால் நேரில் கண்ட சாட்சியங்கள் கூறியபடி கொலையாளியின் உருவப்படம் வரையப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இப்படியெல்லாம் பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.