மதுரை "மீனாட்சி"க்கு எதிராக மல்லுக்கட்டில் குதித்த பாண்டியம்மாள்!
மதுரை: மதுரை மாநகராட்சியில் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் மீனாட்சி எதிராக கேசவபாண்டியம்மாள் என்பவர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்ட தன்னிடம் 10 லட்சம் கேட்டு பேரம் பேசியதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது குற்றம் சாட்டிய அவர், தீக்குளிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 100 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் 75 சதவீதம் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோவிலில், சேடப்பட்டி அதிமுகவினர் சார்பில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வழிபாடு நடந்து கொண்டிருந்த நேரத்தில், உள்ளாட்சி தேர்தல் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அதிமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினருடன் திடீரென வாக்குவாதம் செய்தனர். இதையறிந்த அமைச்சர் உதயகுமார், வாக்குவாதம் செய்தவர்களை அழைத்து சமரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே 1வது வார்டில் மீனாட்சி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீனாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார் கேசவபாண்டியம்மாள். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக சார்பில் நடக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் என்னுடைய பங்கு நிறைய உள்ளது. கட்சிக்கு உழைத்த உரிமையில் 1வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். அமைச்சர் செல்லூர் ராஜூம், துணை மேயர் திரவியமும் ரூபாய் 10 லட்சம் கேட்டு பேரம் பேசினார்கள்.
கட்சிக்காக உழைத்ததை மறந்து இப்படி கேட்கிறீங்களே என்று கேட்டேன். அதற்குள் கட்சியில் சேர்ந்து 10 நாள் கூட ஆகாத, அதிமுக உறுப்பினர் அட்டை இல்லாத மீனாட்சிக்கு சீட் கொடுத்துள்ளனர் என்று கேசவபாண்டியம்மாள் குற்றம் சாட்டினார். தேர்தலில் தனித்து சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும், அதனை அதிமுகவினர் தடுத்தால் தீக்குளிப்பேன் என்றும் கூறியுள்ளார் கேசபாண்டியம்மாள். மீனாட்சிக்கு எதிராக பாண்டியம்மாள் களமிறங்குவதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.