பொட்ட புள்ளங்க சூதானமா இருங்கப்பு... மதுரையின் பாசமான பாஷை - இன்று தாய்மொழி தினம்
பொட்ட புள்ளங்க அங்கிட்டு இங்கிட்டு பெறாக்கு பாக்காமா வெறசா வீடு வந்து சேரணும்... எங்கயும் சூதானமா இருக்கணும் என்று ஒவ்வொரு வார்த்தையிலும் பாசத்தை குழைத்து பேசுவார்கள் மதுரைக்கார பாட்டிகள்.
சென்னை: உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படும் இந்த நாளில் நான் பிறந்து வளர்ந்த என் மதுரை மண்ணின் பாசமான வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முரட்டுத்தனமாக கரடு முரடாக இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசம் இழையோடுவதை உணர முடியும்.
மதுரைக்காரவங்க ஒண்ணு கூடினா போதும் அங்கே அவர்கள் பேசும் பாஷையை கேட்க கேட்க ஒருவித நேசம் இளையோடும். வயது மூத்த ஆண்களைப் பார்த்தால் அண்ணே... என்றும் பெண்களை அக்கா என்றும் ஒருவித ராகக்தோடு அழைப்பதை கேட்க முடியும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவித நேசம் இழையோடும், கோபப்பட்டாலும் குணத்தோடு பேசுவார்கள் மதுரை மண்ணின் மக்கள்.
என்னத்த அங்கிட்டு பாத்துக்கிட்டு... இங்கிட்டு வா... என்ன நின்டு போயிர போவுது... பய்ய போலாம் ஒண்ணும் கொறஞ்சு போயிறாது என்பார்கள்.
வெள்ளனெ வீட்டுக்கு வரணும்னு நினைச்சேன்... ஆனா அசந்துட்டேன்... விடிஞ்சிருச்சு. உசக்க தலைய தூக்கி பாக்கறேன் சாவல காணோம் என்பார்கள்.
பொட்டப்புள்ளங்கள பாத்து பல்ல காட்டாதீங்க... வஞ்சி புடுவாங்கடா...அவங்க பேச மாட்டாங்க அப்புறம் அருவாதாண்டா பேசும் என்று எச்சரிப்பார்கள்.
என்னத்த பெறாக்கு பாத்துக்கிட்டு சோலிய பாப்பியா... கோளார இருக்கணும்பா... என்று ஒருவித சூதானத்தோடு பேசுவார்கள்.
அவிங்க வந்தாய்ங்களா? எங்கிட்டு போனாய்ங்க? ஒரு லக்குல நிக்க மாட்டமா திரியிறாங்க என்பார்கள். ஒரே அலப்பறையா இருக்கேப்பா.. லந்த குடுத்திருச்சு அந்த புள்ள என்று அசால்டாக சொல்வார்கள் இளவட்டங்கள்.
இப்படியே பேசிட்டு இருந்தா ஏழ்ரய கூட்டிருவாணுங்க... ஆட்டும் அப்றம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டே இருப்பார்கள் மதுரைக்கார மண்ணின் மைந்தர்கள்.
தாய்மொழி தினத்தில் எனக்கு தெரிந்த என் மதுரை மண்ணின் பாஷையில் இருந்து சில வார்த்தைகளை எழுதியுள்ளேன். மதுரை மக்களே நீங்களும் உங்க பங்குக்கு எழுதுங்கப்பு.