பயிற்சி கட்டண மோசடி வழக்கு... ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு முன்ஜாமீன்
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளரான சுப்பிரமணியத்துக்கு முன்ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் இத்தொகுதியில் சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டத்தில் 3 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நவீன கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க சென்னை பிரிசிஷன் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இக்கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி மேற்கண்ட நிறுவனம் மாணவ-மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தது. பயிற்சி முடித்தபின் ஒப்பந்தத்தின்படி சுப்பிரமணியன் அந்நிறுவனத்துக்கு பயிற்சி கட்டணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அந்த கம்யூட்டர் நிறுவனம் திருச்சி மாநகர் குற்றப்பிரிவில் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் கண்ணன், சீத்தாராமன், கிறிஸ்துராஜ் ஆகியோர் மீது புகார் செய்தது. போலீசாரும் இவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சுப்பிரமணியம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் 3 பேர் மதுரை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் முன் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவித்து பிரிசிஷன் கம்ப்யூட்டர் நிறுவன பொதுமேலாளர் பாஸ்கர் என்பவரும் மனு செய்தார்.
அதில், ‘'நாங்கள் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான 3 கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தோம். அதன்படி எங்களுக்கு கொடுக்க வேண்டிய 1 கோடியே 13 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது''எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications