சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஓபிஎஸ்ஸுடன் இணையுங்கள்.. எடப்பாடியை அழைக்கும் மாஃபா பாண்டியராஜன்
சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஓபிஎஸ் அணியுடன் இணையுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மஃபா பாண்டியராஜன் மறைமுக அழைப்புவிடுத்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவில் உள்ள இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, வருமான வரித்துறை சோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும் அவர் அதிகாரிகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டது கடுமையான குற்றம் என்றும் தெரிவித்தார்.
வறட்சி
மேலும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு பலவீனமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள் என்றும் பாண்டியராஜன் கூறினார். மேலும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகள்
விவசாயிகள் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்றும் விவசாயிகள் பிரச்சினை பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்றும் கருத்து தெரிவித்த பாண்டியராஜன், திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் ஓபிஎஸ் அணி பங்கேற்காது என்று கூறினார். மேலும், திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் போலித்தனமானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்
காவிரி பிரச்சனை
இதுதவிர திமுகவிற்கு காவிரி பிரச்சனை குறித்து பேசவும் தகுதி இல்லை என்று பாண்டியராஜன் கூறினார். மேலும், அது பற்றி சட்டசபையில் பேச திமுகவிற்கு துணிவு இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
எடப்பாடிக்கு அழைப்பு
அதி முக்கியமாக அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார். அதற்கு அதிமுகவில் உள்ள இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக அழைப்புவிடுத்தார்.