சபாஷ் கமல்.. இதுபோல இறங்குங்க.. இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
கிராம சபையை வலியுறுத்தும் மக்கள் நீதி மய்யத்திற்கு வாழ்த்துக்கள்.
Recommended Video
சென்னை: கமல் கையில் எடுத்துள்ள இந்த கிராம சபை என்பது என்ன? கிராம சபையில் கமல் வலியுறுத்தும் விஷயங்கள்தான் என்ன?
பழங்காலத்தில் குடவோடலை முறை என ஒன்று இருந்தது. அதாவது ஒரு ஊரே ஒன்று திரண்டு நிற்பார்கள். யாரை தங்களுக்கு கிராம நிர்வாக சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அவர்களது பெயரை ஒரு ஓலைச்சுவடியில் எழுதுவார்கள். பின்னர் அனைத்து ஓலைச்சுவடிகளையும் ஒன்றாக கட்டிவிடுவார்கள்.
குடவோலைமுறை
பின்னர் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு பானை வைக்கப்பட்டிருக்கும். அந்த பானையில் அந்த ஓலைச்சுவடிகளை போட்டு குலுக்கி அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பர். இந்த முறை சோழர் காலத்தில் மிகவும் பிரபலமானது. சோழர்களின் வளர்ச்சிக்கு குடவோலை முறை பெரிதும் உதவியது. இந்த தேர்தல் முறையில் எந்த தகராறும், வாக்குவாதமும், முறைகேடும் நடக்கவே நடக்காது.
பயன்படுத்தவில்லை
இந்த கிராம சபை என்பதின் ஒரு அம்சம்தான் இந்த குடவோலை முறை. ஆனால் கிராம சபை என்பது நம் நாட்டில் எப்போதிலிருந்தோ இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ராஜீவ்காந்தி காலகட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் கொண்டுவரப்பட்டது. கிராமங்களுக்கு முக்கியத்துவமும் அப்போது வழங்கப்பட்டன. அதனால் கிராமங்களும் தங்களின் வலிமையை அதிகமாக உணர்ந்தனர். அதன்பின்னர் இந்த உள்ளாட்சி அமைப்புகளை யாருமே கையில் எடுக்கவில்லை, சரியாக பயன்படுத்தி கொள்ளவும் இல்லை.
கமலின் யதார்த்தம்
இதைத்தான் கமல் வலியுறுத்தி வருகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக சக்தி இருக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முயற்சியும் மேற்கொண்டுள்ளார். கமலின் மக்கள் நீதி மய்யம் என்ற விஷயத்திற்குள் நாம் உள்ளே செல்ல தேவை இல்லை என்றாலும், கமல் வலியுறுத்தும் இந்த விஷயம் உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதற்காக மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கும் கமல் நேரிலே சென்று விழிப்புணர்வு ஊட்டியதும் நல்ல விஷயம்தான். நம்மால் எளிதாக அமல்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இன்னொருவர் வந்துதான் செய்து முடிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று கமல் எழுப்பும் கேள்வியும் எதார்த்தம் நிறைந்ததுதான்.
அரசியலமைப்பின் ஓர் அங்கம்
உதாரணத்திற்கு, டாஸ்மாக்-கிற்கு எதிராக ஊரே ஒன்று கூடி போராடுவதை விட்டுவிட்டு, கிராம சபையை கூட்டி டாஸ்மாக் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அந்த முடிதான் இறுதியான முடிவு!! இதில் மக்களின் ஒட்டுமொத்த கருத்தையும் மீறி யாரும் செயல்படவோ, செயல்படுத்தவோ முடியாது. ஏனென்றால், அரசியலமைப்பின் ஒரு அங்கம்தான் கிராம சபை!! இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளோ, பஞ்சாயத்து தலைவர்களோ மக்கள் முன்னே வைக்கும் கோரிக்கைகளை ஒருக்காலும் நிராகரிக்கவே முடியாது.
இளைஞர் கூட்டம்
இப்படி கிராம சபை என்கிற ஒரு பவர் நம் கையில் இருக்கிறது என்பதையும், இதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களும் தம் தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ள முடியும் என்பதையும், தங்கள் குறைகளை தாங்களே களைந்து கொள்ளலாம் என்பதையும்தான் கமல் வலியுறுத்தி வருகின்றன விஷயம். சென்ற வருடம் வரை கிராம சபை என்ற பெயரை கேள்விப்படாத இளைஞர் கூட்டமும் நம் மாநிலத்தில் இருந்தனர். தற்போது கிராம சபை என்ற பெயர் பரவலாக தெரிய ஆரம்பித்துள்ளதுடன், அதன் அவசியமும் தெரிய ஆரம்பித்துள்ளது.
கிராமசபை - லொல்லுசபை
இவ்வளவு காலம் வெறும் சம்பிரதாயமாகவே நடந்து வரும் இந்த கிராப சபை கூட்டங்கள், இனி ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டப்படுமானால், நிச்சயம் ஆரோக்கியமான விவாதங்கள் அங்கு நிகழ வாய்ப்புள்ளது. அனுகூலமான முடிவுகள் எடுக்கவும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் இதிலும் லோக்கல் பாலிடிக்ஸ் புகுந்து கிராம சபை, லொள்ளு சபையாக மாறிவிடக்கூடாது.
நடைமுறை சாத்தியமா?
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், கிராமங்களை நோக்கி நகரங்கள் ஒரு நாள் வரப்போகிறது என்று கமல் சொல்லி வருகிறார். ஆனால் 25 வருடங்களாக இது சம்பந்தமான சட்டமே இயற்றாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. எனவே கமலின் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை.
முன்பே சொல்லலாமே?
அதேபோல, இவ்வளவு காலம் நம் நாடு கிராமங்களில்தான் ஊறிக் கிடக்கிறது. கமல் திரைப்படங்களில் நடிக்கும்போதும் இதே கிராமங்கள்தான், இதே பிரச்சனைகள்தான் நிலவின! அப்போதெல்லாம் கமல் கிராம சபை பற்றி பேசியிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும் என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதை அரசியலுக்கு வந்த பின்னர்தான் பேச வேண்டும் என்றில்லையே!
சாத்தியமாகும்
எப்படியோ, கிராம பஞ்சாயத்து குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் நம் மக்கள் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றே! 25 வருடங்களாக புதைந்து கிடக்கும் நம் பொக்கிஷமான கிராம சபையை, கமல் மீண்டும் தோண்டி எடுக்க களம் இறங்கியுள்ளார். சுருக்கமாக சொல்லப்போனால் அசாத்தியமாக நினைக்கும் ஒரு விஷயத்தை சாத்தியமாக்கும் வலிமை கிராம சபைக்கு உண்டு என்பதை நினைவூட்டி அதற்கு வலு சேர்த்து வரும் கமலுக்கு "அரசியல் சார்பற்ற சபாஷ்!"