குடும்பத்திலும் கடும் எதிர்ப்பு- தினகரனுக்கு எதிராக கைகோர்த்த திவாகரனின் மூவர் அணி!
அதிமுகவில் தினகரனுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் திவாகரனின் மூவர் அணியும் அவருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் டிடிவி தினகரனுக்கு எதிராக திவாகரனின் மூவர் அணியும் களமிறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் தினகரன் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். தினகரனை ஆதரித்தால் மீண்டும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தின்கீழ் வர வேண்டியிருக்கும் என்பதால் அனைவரும் எடப்பாடி சொல்வதைக் கேட்டுச் செயல்படுகின்றனர்.
எம்.எல்.ஏக்களுக்கும் தேவையான வசதிகளை, எந்தவித தயக்கமும் இல்லாமல் செய்து தருமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி. தற்போதுள்ள சூழலில் மிக அதிகபட்சமாக 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தினகரனை ஆதரிக்கின்றனர்.
கொந்தளிக்கும் தினகரன்
இதை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதால் தம்மை சந்திக்க வருவோரிடம் சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, முதல்வர் பதவியை நான் வாங்கியிருக்க வேண்டும். நமக்கு விசுவாசமாக கொங்கு மண்டலம் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எடப்பாடியை முன்னிறுத்தினோம். ஓபிஎஸ்-க்கு சளைத்தவனல்ல என்பது போல செயல்படுகிறார் எடப்பாடி. நமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்ற தோற்றத்தைக் காட்டிக் கொண்டே, அமைச்சர்களைத் தூண்டிவிடுகிறார். அவருக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும் எனக் கொதித்திருக்கிறார் தினகரன்.
திவாகரனின் மூவர் அணி
அதேநேரத்தில் சசிகலா, தினகரன் மீது கோபமாக இருப்பதை திவாகரன் தரப்பு பெரிதும் ரசித்து வருகிறது. தற்போது தினகரனுக்கு எதிராக தனி அணியாகவும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது இந்த கோஷ்டி. இந்த அணியில் டாக்டர்.வெங்கடேஷ், பாஸ்கரன், திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மூவர் அணி விவாதம்
இதில் பாஸ்கரனின் மகளைத்தான் ஜெயானந்த் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த மூவர் அணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் விவாதித்துள்ளனர். அப்போது, நாம் சொல்லும் எந்தக் கோரிக்கைகளையும் நிராகரிக்காமல் செய்து வருகிறார் எடப்பாடி. ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில், நமக்கு வேண்டப்பட்ட சிலரும் வந்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழல்கள் நம் குடும்பத்துக்கு சாதகமாக இல்லை. இதைப் புரிந்து கொண்டு அரசியல் செய்யாமல், தினகரன் முந்திக் கொண்டதால்தான் பல விளைவுகளை சந்தித்தோம். நல்ல நேரம் வரும் வரையில் காத்திருக்க வேண்டும். தினகரன் அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால், பெங்களூரு சிறையில் வாடுகிறார் சசிகலா. கட்சி நம்முடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மத்திய அரசில் நமக்கு சாதகமான போக்கை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவோம். தினகரன் ஒதுங்கிக் கொண்டாலே, அனைத்தும் சரியாகிவிடும் எனப் பேசியுள்ளனர்.
ரசிக்கும் கொங்கு லாபி
தனக்கு எதிராகக் கட்சியும் ஆட்சியும் குடும்பமும் ஒரேநேரத்தில் திரண்டிருப்பதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார் தினகரன். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கார்டன் பணிகளைக் கவனித்து வந்த டாக்டர்.வெங்கடேஷும் திவாகரனின் கோஷ்டியில் ஐக்கியமானதைத்தான் அதிகம் ஜீரணிக்க முடியாமல் கொந்தளிப்பில் இருக்கிறாராம் தினகரன். அதேநேரத்தில் இந்த சண்டையை மெல்லமாக ரசித்துக் கொண்டிருக்கிறது கொங்கு லாபி.