நீட் தேர்வில் இருந்து ஓரிரு ஆண்டுகள் விலக்கு ... பொன் ராதாகிருஷ்ணன் ஆரூடம்
நீட் தேர்வில் இருந்து ஓரிரு ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படலாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர்: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து ஓரிரு ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படலாம் என மத்திய இணையஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு ஓரிரு ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படலாம்.
அப்படி இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் இருக்க கூடிய சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் படித்து வரும் மாணவர்களின் விகிதாசாரம், மாநில கல்வி அடிப்படையில் படித்து வரும் விகிதாசாரத்திலாவது மாணவர் சேர்க்கை நடத்தலாம்.
இது குறித்து ஏற்கெனவே மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன். ஆனால் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதில் என உடன்பாடு இல்லை.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைப்பது குறித்து தமிழக முதல்வரை பார்த்து பேசினேன். அப்போது அவர் முதல்முறையாக இதற்கு சாதகமான பதிலை தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான மாநில சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார். மேலும் சாலை போக்குவரத்து மட்டுமின்றி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையில் ரயில் பாதையும், கடல் வழியாக நீர் போக்குவரத்தும் இன்னும் இரு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.