அதிகார பீடத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்றுவதே தலையாய கடமை: மதிமுக தீர்மானம்
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 22ஆவது பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானரகம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் துவங்கியது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப்பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை பின்வருமாறு:

தமிழர்களுக்கு துரோகம்
மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழக வாழ்வாதாராப்பிரச்சினையான நதிநீர்பங்கீடு பிரச்சினையில் துரோகம் இழைக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காகக் கொண்டு மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.
பொது வாக்கெடுப்பு
ஈழத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்றே சரியான தீர்வு.
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக்குழு அமைத்திடுக.
விவசாயிகளுக்கு
காவிரி பாசனப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்க. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு மதிமுக கண்டனம் தெரிவிக்கிறது.
கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாய விலை பொருட்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயிக்க வேண்டும்.
மதுவிலக்கு
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

அணு உலையை மூடுக
தென் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மீனவர்கள் தாக்குதல்
தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும். உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களை திரும்ப பெறவேண்டும்.
தமிழ் மொழியை ஆட்சிமொழி
இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட மதிமுக தொடர்ந்து பாடுபடும். தமிழகத்தில் உயர்நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாகவேண்டும்.
சமூக நீதிக்கு எதிரான போராட்டம்
சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண் 252ல் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். தமிழக அரசின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடுமுறையை பின்பற்ற வேண்டும்.
மாநில சுய ஆட்சி
உண்மையான கூட்டாட்சி, மாநில சுயாட்சி நிலை பெற நடவடிக்கை தேவை
அந்நிய நேரடி முதலீடு
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரீசிலனை செய்யவேண்டும்.
கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
பிப்ரவரி 26ல் ஓங்கி எழட்டும் சங்கநாதம்
தமிழகம் மட்டுமல்லாது லண்டனிலும், தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்காக பிப்ரவரி 26ம் தேதி மதிமுக தலைமையில் போராட்டம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications