உண்மையிலேயே மருத்துவ கல்வி நுழைவு தேர்வு நல்லதுங்க..சொல்வது தமிழ்!
சென்னை: மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு நல்லது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மருத்துவ கல்விக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழிசையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எந்தவித பயனும் தராது என்று சொல்வது தவறான கருத்து. இந்தியா முழுவதும் மருத்துவ கல்வி படிப்பிற்காக 60 நுழைவுத்தேர்வுகள் நடக்கின்றன. மத்திய அரசு, இவை அனைத்தையும் ஒரே நுழைவுத்தேர்வாக நடத்துகிறது.
கிராமப்புற மாணவர்களும் நன்றாக படித்து மருத்துவத்துறைக்கு செல்வதற்கு இந்த நுழைவுத்தேர்வு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்தவுடன், மாணவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அப்படி செய்யவில்லை.
இந்த நுழைவுத்தேர்வு தனியார் கல்லூரிகளின் அதிகாரத்தை குறைக்கும். நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று சொல்பவர்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக தான் அர்த்தம். இவ்வாறு கூறினார்.