100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: ஒகேனேக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து புதன்கிழமை விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 97 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று இரவு 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிரம்பிய அணைகள்
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, பத்ரா உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளம்
இதனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
90000 கனஅடி நீர்
இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து புதன்கிழமை விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வியாழக்கிழமை முதல் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 25 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
வெள்ள எச்சரிக்கை அபாயம்
ஒகேனக்கல்லுக்கு இன்று மதியத்திற்குள் ஒரு லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் நாகமரை, நெருப்பூர், காவிரி முதலைப் பண்ணை ஆகிய ஊர்களில் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் நிர்வாகம்
கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
100 அடியை எட்டும்
காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.14 அடியாக உள்ளது. இன்று இரவுக்குள் அணை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 22,120 கன அடியில் இருந்து 41,806 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 61.23 டிஎம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில், 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது..
அணை திறப்பு
டெல்டா பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 15-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.