மேட்டூர்: புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி!
மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தில் பலமுறை சோதனை ஓட்டத்திற்கு பின்பு மின் உற்பத்தி இயக்கம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த மின்நிலையத்தில் தொடக்கத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அனல் மின் நிலையத்தில் கடந்த 4-ஆம் தேதி மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், கடந்த சில நாள்களாக 480 மெகா வாட் மின்சாரம் வீதம் உற்பத்தி செய்யப்பட்டது.
இது செவ்வாய்க்கிழமை சுமார் 530 மெகா வாட்டாக உயர்ந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலை மேலும் 30 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரித்து இரவில் சுமார் 560 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இயந்திரக் கோளாறு ஏதும் ஏற்படாதபட்சத்தில், இன்று முழு உற்பத்தித் திறனான 600 மெகா வாட்டை எட்டும் என்றும், புதிய அனல் மின் நிலையம் தற்போது தரமான உள்நாட்டு நிலக்கரியைக் கொண்டு இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாகவும் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பழைய அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட்டில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த யூனிட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் புதிய அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடிகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.