மதுரையில் ஈபிஎஸ் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா - ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
மதுரை: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இந்த விழாவில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும், ஓபிஎஸ் ஆதரவு எம்.பி, எம்எல்ஏக்களும் புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று காலை 11 மணிக்கு மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 4 இடங்களில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் விழாவிற்காக பாண்டிகோவில் அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்

எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி 2018ஆம் ஆண்டு ஜனவரி வரை கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டே அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பல அணிகளாக சிதறி கிடக்கிறது.

அதிமுக அம்மா அணி
அதிமுக அம்மா அணியே ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி என பிரிந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

மதுரையில் கோலாகலம்
மதுரை, பாண்டிகோவில் அம்மா திடலில் எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை லட்சுமண் சுருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையிலான பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நலத்திட்ட உதவிகள்
பிறந்தநாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகிக்கின்றனர்.

கோலகல வரவேற்பு
முன்னதாக எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தாநாள் விழாவில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முளைப்பாரி ஊர்வலதோடு வந்து மகளிர் அணியினர் வரவேற்றனர்.

புகைப்பட கண்காட்சி
விழா நடைபெறும் அரங்கில் செய்தித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்ஜிஆர் நினைவு புகைப்படக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் விழா எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. இப்தார் விருந்தை புறக்கணித்தது போல எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் விழாவை புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications