லோக்சபா தேர்தலுக்கு பிறகு தேமுதிக காணாமல் போய்விடும்: நாஞ்சில் சம்பத் ஆருடம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் அந்த தொகுதி அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.
முருகுமாறன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிமைகள், திட்டங்களை கொடுக்காமல் வஞ்சித்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தனது திறமையான செயல்பாட்டால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெருக திட்டங்களை அளித்து அதை உடனுக்குடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவரை பிரதமராக ஆக்க வாக்களியுங்கள்.
எம்.ஜி.ஆர். கட்சி துவங்கியபோது அஇஅதிமுக என்ற பெயரில் அகில இந்தியா இருந்தது. வரும் காலத்தில் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவை ஆளப் போவது அப்போதே தெரிந்திருக்கிறது.
ஏற்காடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்றார் விஜயகாந்த். ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. ஒரு சுயேட்சை வேட்பாளர் வாங்கும் வாக்குகளை கூட அவரது கட்சியினர் வாங்கவில்லை. சரியாக முடிவு எடுக்கத் தெரியாதவர் விஜயகாந்த். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேமுதிக காணாமல் போய்விடும் என்றார்.