கோவில் வேப்ப மரத்தில் வடிந்த பால்: சாமியாடிய பக்தர்கள்!!
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் வேப்பமரத்தில் பால் வடிந்ததைக் கண்டு பக்தர்கள் அதிசயத்தனர். வேப்பமரத்திற்கு மஞ்சள் துணி கட்டி சூடம் ஏற்றி வழிபட்டனர். பெண் பக்தர்கள் சிலருக்கு அருள் வந்து சாமியாடினர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டி கிராமத்திற்கு வெளிப்புறம் பெத்தனசாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வேம்பு, தென்னை, நாவல், புளி உள்பட 500க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
செவ்வாய்கிழமையன்று இங்குள்ள ஒரு வேப்பமரத்தில் 3 இடங்களில் இருந்து வெள்ளை நிறத்தில் நுரையுடன் திரவம் வடிந்ததை பார்த்த பொதுமக்கள் அதிசயித்தனர்.
கோவில் நிலத்தில் உள்ள மரத்தில் தொடர்ந்து பால் போல் திரவம் வடிந்ததால் திரண்ட கிராம மக்கள் பெத்தாகம்மன் காட்சி தருவதகாவும் பக்தர்கள் பேசினர்.
இச்செய்தி காட்டுதீபோல் பரவியதால் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து அதிசயமாக பார்த்து வழிபட்டனர்.
மரத்தின் அருகே புதியதாக சிறுபுற்று உருவாகியுள்ளதால் அது காவல் தெய்வம் என்று கூறி சூடம் ஏற்றி வழிபடத் தொடங்கியுள்ளனர்.
வேப்பமரத்தில் இருந்து வடியும் பால் போன்ற திரவத்தை தீர்த்தமாக பருகியும், அதன்சுவை இளநீர்,தேன் மற்றும் நெய்போன்று இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். சாமி கும்பிட வரும் பெண்களுக்கு திடீரென அருள் வரவே அவர்கள் குலவையிட்டும் சாமியாடினர்.