நல்லா தெளிவா பேசுங்க... எப்பப் பார்த்தாலும் தூங்கி வழியற மாதிரியே பேசுனா எப்படி சார்!
போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறையினர் சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை : போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறையினர் நடத்திய ரெய்டு குறித்து ஊருக்கே தெரிந்த நிலையில் தனக்கு தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு சிறிய டெம்போவில் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள், லேப்டாப், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு ஒரு சில அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.
இத்போல் கடந்த வாரம் 187 இடங்களில் நடைபெற்ற சோதனை குறித்து செய்தியாளர்கள் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அப்படியாப்பா.. எனக்குத் தெரியாதே... நான் இப்போதுதான் தூங்கி எழுந்தேன் என்று கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது உளறி கொட்டி வருகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதாவது ஜெயலலிதா அப்பல்லோ இருந்தபோது இட்லியும் சாப்பிடலை, சட்னியும் சாப்பிடலை என்று கூறி மன்னிப்பு கேட்டார். பாரத பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்றும் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும், அவர் பரத நாட்டிய கலைஞர் என்றும் உளறி கொட்டினார்.
இதனால் தற்போது அவர் வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க செய்தியாளர்கள் எதை கேட்டாலும் தனக்கு தெரியாது என்று மிகவும் சேஃப்பாக விளையாடுகிறார் போலும்.