கஜானாவில் பணம் இருக்கும் என வாக்குறுதிகளை அறிவிச்சுட்டோம்..அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
அருப்புக்கோட்டை: தமிழக அரசின் கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அறிவித்தோம்; ஆனால் கஜானாவில் பணமே இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
Recommended Video
சட்டசபை தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றவில்லை என்பது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார். ஆனால் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றுகிறோம் என்கிறது திமுக.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், 15வது அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு மற்றும் நகர மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது: திமுக ஆட்சி நல்ல ஆட்சி , திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் எதுவும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 20 ஆண்டுகள் முதல்வராக இருப்பார்.
தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்க கூட ஆள் இல்லை. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களை கூட அறிவிக்கவில்லை. அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது.
அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சி. கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து அத்தனையும் அறிவித்துவிட்டோம். கஜானாவை திறந்தால் ரூ 4 லட்சம் கோடிக்கு கடன் உள்ளது என்ற துண்டு சீட்டுதான் இருந்தது.
கடந்த ஒரு வருடமாக இக்கட்டான சூழலில் ஆட்சி நடந்தது. இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழகம்தான். இல்லத்தரசிகளுக்கு விரைவில் மாதம் ரூ 1000 வழங்கப்படும். அருப்புக்கோட்டையில் விரைவில் தினந்தோறும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும்.அரசு மருத்துவமனை விரைவில் ரூ 50 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். தொகுதியில் மக்களுக்கு அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
இந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ், நகர மன்ற உறுப்பிணர்கள் , மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் , நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்க - இந்தியாவுக்கு வங்கதேச அமைச்சர் அட்வைஸ்