2.44% ஊதிய உயர்வு தர தயார்... தொழிற்சங்கத்தினரிடம் அரசு உறுதி!
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 சதவிகிதம் ஊதிய உயர்வு தரத் தயார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
சென்னை : போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 சதவிகிதம் ஊதிய உயர்வு தரத் தயார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் கோரிய 2.57 % ஊதிய உயர்வுக்குப் பதில் 2.40% ஊதிய உயர்வு தர அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 2.44 சதவிகிதத்துடன் கூடுதல் தொகையாக 0.3% வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதயளித்துள்ளார்.
3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யவும் அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசின் இந்த உறுதிகுறித்து தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
2.57 சதவீத ஊதியம் உயர்வு தர அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென பேருந்துகளை நடுவழியில் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அரசுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே நாளை பேருந்துகள் இயக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.