கொரோனா தடுப்பூசி டெண்டர் கோராத நிறுவனங்கள்.. மத்திய அரசை குறை கூறுவது அபத்தம்.. மா சுப்பிரமணியன்
உதகை: கொரோனா தடுப்பூசி குறித்து எந்த நிறுவனமும் இதுவரை ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்து உலகளாவிய டெண்டரை கோரியுள்ளது. இதன் மூலம் 5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகம் இருப்பதால் உலக அளவில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. கடந்த மே 12 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
ரூ 2 கோடி
அதன்படி 5 கோடி தடுப்பூசிகளை ரூ 2 கோடிக்கு ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டன. மேலும் 90 நாட்களுக்குள் தடுப்பூசிகளை டெலிவரி செய்யும் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்தது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்திலும் கடலூர், தஞ்சை, திருச்சி, சிவகங்கை, நெல்லை, வேலூர், சேலம் மற்றும் கோவை ஆகிய மாவட்ட தடுப்பூசி கிடங்குகளிலும் டெலிவரி செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
தட்டுப்பாடுகள்
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் சமயோஜிதமாக யோசித்து உலகளவில் டெண்டர் கோரியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டெண்டர் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
டெண்டர்
அப்போது அவர் கூறுகையில் கொரோனா தடுப்பூசிக்காக உலகளவில் டெண்டர் கோரிய நிலையில் டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இது போன்று எந்த நிறுவனங்களும் டெண்டரை பெற முன்வராததற்கு மத்திய அரசுதான் காரணம் என கூறுவது அபத்தமாக இருக்கும்.
பக்குவம்
முதல்வருடன் ஆலோசித்து விரைவில் மீண்டும் ஒரு முறை டெண்டர் கோரப்படும் என்றார் மா சுப்பிரமணியன். தொட்டதற்கெல்லாம் மத்திய அரசை குற்றம்சாட்டாமல் நிருபர்களே இந்த கேள்வியை கேட்ட பிறகும் மத்திய அரசை குறை கூறுவது அபத்தம் என கூறியது அமைச்சரின் பக்குவத்தையே காட்டுவதாக கூறுகிறார்கள்.