கொடுங்கையூரில் அநியாயமாக பலியான சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார்.. மக்கள் கொந்தளிப்பு!
சிறுமிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: கொடுங்கையூர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை கொடுங்கையூரில் எம்.ஜி.ஆர் நகரில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ ஆகியோர் மிதித்ததில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலியான சிறுமிகள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் கம்பி அறுந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததன் அலட்சியத்தாலேயே சிறுமிகள் பலியாகி உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று மருத்துவமனைக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இரண்டு உயிர்களை காவு கொண்ட பிறகே பழுதடைந்த நிலையில் இருந்த மின்சார பெட்டி சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமிகளின் உடல் கொடுங்கையூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்றார். கவனக்குறைவாக யார் செயல்பட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அலட்சியமாக செயல்பட்டவர்களை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கொடுங்கையூருக்கு ஆறுதல் கூற வந்த போது, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். கொடுங்கையூரில் பழுதடைந்துள்ள மின்பெட்டிகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அப்போது அனைவரையும் அமைதிபடுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார்.
மக்கள் கோரிக்கைதான் வைத்தனர். பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க கூறினார்கள். மழை நின்ற உடன் சரி செய்து தருவதாக கூறியுள்ளேன் என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குடார்.