சமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன்.. தமிழர்களே ஹிந்தி, சமஸ்கிருதம் படியுங்கள்: பொன்.ராதா
சென்னை: ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழர்களும் படிக்க வேண்டும் என மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை மீனாட்சி, பெண்கள் கல்லூரியில் நடந்த சமஸ்கிருத மகா சம்மேளன விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். நிகழ்ச்சியில் பேசியதாவது: பல்வேறு காரணங்களால் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனது. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
சமஸ்கிருதம் படிக்காததால் அந்த மொழியை என்னால் பேச முடியவில்லை. ஆனால் அடுத்து வரும் தலைமுறையானது தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு மொழிகளை கற்க வேண்டும் என விரும்புகிறேன். மொழியை கற்பதில் அரசியல் விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திர மக்கள் ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், எக்காரணமும் இன்றி தமிழர்கள் ஹிந்தி படிப்பதை தவிர்ப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
சமஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் போன்றவை. இதில் எது உயர்ந்தது, தாழ்ந்தது என யாராலும் சொல்ல முடியாது. அவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வளர்ச்சி அடைந்தவை.
கம்பன் தமிழில் எழுதிய ராமாயணத்தை படித்து மகிழ்ந்துள்ளேன். அதே அளவு மரியாதையை சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதி ராமாயணத்திற்கும் கொடுக்கிறேன். இவ்விரு மொழிகளுக்கும், அக்காலத்தில் இணக்கமான சூழ்நிலை இருந்துள்ளது இதன்மூலம் புலப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.