முதல்வரை திடீரென சந்தித்த விஜயபாஸ்கர்.. "நீட்" தொடர்பா பார்த்தாராம்!
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். நீட் தேர்வு தொடர்பான சந்திப்பு என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை: ஐடி ரெய்டுக்குள்ளான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது ரூ.89 கோடி பணம், பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறையினர் அவரிடம் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஐடி ரெய்டின் போது அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 4 அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக இணைப்புக்கா தினகரனை கைகழுவும் முயற்சிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எதிர்ப்பில் உள்ளார்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜயபாஸ்கர் சந்தித்தார். இதனால் அவரை ராஜினாமா செய்ய நிர்பந்தித்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் தான் நீட் தேர்வு தொடர்பாக சந்தித்ததாக கூறியுள்ளார் விஜயபாஸ்கர்.
நம்புங்க சார் எல்லாப் பேரும் தயவு செய்து நம்பிருங்க!