நீட் சட்டச்சிக்கலை நீக்க தொடர் ஆலோசனை... விரைவில் மேல்முறையீடு: விஜயபாஸ்கர்!
நீட் விவகாரத்தில் உள்ள சட்டசிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 85 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சட்டச்சிக்கல்களைக் களைவது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்' என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த தனி நீதிபதி அரசின் உள்ஒதுக்கீடு அரசாணை ஒருதலைபட்சமாக இருப்பதால் அதனை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இரண்டு நபர் நீதிமன்ற அமர்வுக்கு அரசு மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி மூர்த்தி ராமமோகனராவ், தண்டபாணி அமர்வு தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றே கூறியது. இதனால் மாணவர் சேர்க்கைக்கு அரசு பிறப்பித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று அர்த்தமானது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Recommended Video
நீட் விவகாரத்தில் உள்ள சட்டச்சிக்கல்களை களைய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு கோரியுள்ள நிலையில் 3 நாட்களில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.