விஜய்க்கு அமைச்சர் ஜெயக்குமார் சப்போர்ட்.. பாஜக தலைவர்களுக்கு பதிலடி
சென்னை: யாரையும் கொச்சைப்படுத்த கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நடிகர் விஜய் குறித்தும் அவரது மதத்தை முன்வைத்தும் எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். மெர்சல் படத்திலல் இடம்பெற்றுள்ள வசனத்தை வெட்டி எறிய வேண்டும் என தமிழிசை ஆவேசம் காட்டுகிறார்.
இந்த நிலையில், விஜய்க்கு எதிரான தனிமனித தாக்குதல் விமர்சனங்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
மெர்சலான தினகரன்
ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவுக்கும், தினகரனுக்கும்தான் இப்போது தமிழகத்தில் மெர்சல் (மோசமான நிலை). ஆனால் மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை
சென்சார் போர்டு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது, காரில் வரும்போது நான் சில செய்திகளை படித்தேன். சென்சார் போர்டு சில காட்சிகளை நீக்குவதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.
கொச்சைப்படுத்த கூடாது
விஜய் குறித்து தனிப்பட்ட வகையில் விமர்சனங்கள் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், என்னை பொறுத்தளவில் அரசியலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் சரி, யாரையும் கொச்சைப்படுத்த கூடாது. பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பார்த்தீர்கள் என்றால், தினகரனுக்கு 20 பேர் கொண்ட ஐடி குரூப் உள்ளனர், திமுகவினருக்கு ஐடி குரூப் உள்ளனர்.
ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை
நீங்கள் ஒரு கருத்து சொன்னால் உடனே இந்த குரூப்பை சேர்ந்தவர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். அது ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. யாராக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும். அதுதான் பண்பாடு உள்ள விஷயம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை
அண்ணாவிலிருந்து, எம்ஜியாரிலிருந்து, ஜெயலலிதாவரை எங்களுக்கு, அடுத்தவர்களை மதிக்க கற்றுக்கொடுத்துள்ளனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கொள்கையில் வந்தவர்கள் நாங்கள். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். கமலுக்கு எதிரான விமர்சனங்களை அதிக அளவு முன்வைத்த அமைச்சர்களில் ஒருவர் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.