ஜனநாயகக் கடமையாற்ற நினைக்கிறோம்... தடுப்பது சர்வாதிகாரம் - ஸ்டாலின்
சென்னை: எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் என மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தம்மையோ, மற்ற திமுக உறுப்பினர்களையோ அனுமதிக்க மறுப்பதாக சாடிய ஸ்டாலின், இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கும் விதமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.
தமிழக சட்டசபையில் இருந்து நேற்று குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.ஸ்டாலின் உட்பட 80 திமுக எம்.எல்.ஏக்களை ஒருவாரத்துக்கு இடை நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை சட்டசபை வளாகத்திற்குள் வந்த திமுகவினரை பேரவை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை வளாகத்தில் பதட்டம் நிலவியது.
இதைத் தொடர்ந்து பேரவை வளாகத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அலுவலகத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் திமுக எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்திற்கு பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் என குற்றம்சாட்டினார்.
எதிர்கட்சித் தலைவரின் அறைக்கு தம்மையோ, மற்ற திமுக உறுப்பினர்களையோ அவைக்காவலர்கள் அனுமதிக்க மறுப்பதாக சாடினார். சபாநாயகரின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கும் விதமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட அவர், பேரவை நடவடிக்கைகள் அனைத்திலும் திமுக உறுப்பினர்கள் பங்குபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வெளிநடப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டு திமுக உறுப்பினர்கள் பேரவைக்கு வரவில்லை என உறுதிபட கூறிய ஸ்டாலின், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாட்டு மக்களுக்கு இதுகுறித்த உண்மை தெரிய வரும் என்றார்.
பேரவையின் விதிகளுக்கு மாறாக அவையில் குந்தகம் செய்ததால் ஒரு வாரத்திற்கு பேரவை பணியில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக தான் சபாநாயகர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவருக்கான அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்வாதிகார முறையை திணிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், சபாநாயகர் பேச்சுக்கு விளக்கம் தர எங்களுக்கு வாய்ப்பு தரப்படாததால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு, புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சபாநாயகர் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஸ்டாலினைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை என சாடினார். எது சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதி என்பது கூட அறியாதவராக சபாநாயகர் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
சபாநாயகருக்கு சட்டம் தெரியவைல்லை. எது பேரவைக்குட்பட்ட பகுதி, எது வெளியே உள்ள பகுதி என்று தெரியாமல், அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். கோட்டை முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். சட்டசபை உறுப்பினர் பணியை தடுத்ததாக சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவேன் என்றும் துரைமுருகன் கூறினார்.