நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளூர்: நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என்ற நடைமுறையால் மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நீட் தேர்வு தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சட்டசபையில் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்துக்கு எவ்வளவு
சிபிஎஸ்இ பாட திட்ட மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2203 இடங்கள் மாநில பாட திட்ட மாணவர்களுக்கும், 391 இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்ததற்கு திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். திருவள்ளூரில் நடைபெற்ற குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் அடைந்த தோல்வியை மறைக்கவே அரசு திசை திருப்புகிறது.
மோசடி செயல்
உள்இடஒதுக்கீடு என்பது தமிழக மாணவர்களை ஏமாற்றும் மோசடிச் செயலை ஏற்க முடியாது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானது.
விளையாடதீங்க...
சிபிஎஸ்இ பிரிவினருக்கு 15 சதவீதம் இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.