காவலாளி கொலை... இப்போது யார் வசம் கொடநாடு?... மு.க.ஸ்டாலின் கேள்வி
காவலாளி கொலை செய்யப்ப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களா தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று தி.மு.க செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை தோட்டங்கள் சூழ பிரம்மாண்டமான பங்களா கொடநாட்டில் உள்ளது. இந்த பங்களாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காவல் பணியில் ஈடுபட்டிர்ந்த ஓம் பகதூர் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதே போன்று நள்ளிரவில் காரில் வந்த மர்ம கும்பல் மற்றொரு காவலாளியான கிஷன் பகதூரையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
மர்ம நபர்கள் கொடநாடு பங்களாவில் கொள்ளையை நிகழ்த்திவிட்டு தப்பிக்கும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உண்மையில் நடைபெற்ற நிலவரம் குறித்து மற்றொரு காவலர் கிஷன் உயிர் பிழைத்து கூறினால் தெரிய வரும்.
இந்நிலையில் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தின் மூலம் கொடநாடு பங்களா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறினார். மேலும் கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.