ஒரே கேள்வியில் தினகரனை "காமெடி பீஸாக்கிய" கோவை வடக்கு அருண் குமார்!
பொறுப்பே வேண்டாம் என்று உதறிவிட்டு வெளியே வந்துவிட்டேன். பிறகு எப்படி என்னை டிடிவி தினகரன் நீக்க முடியும் என்று எம்எல்ஏ அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக, கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் தலைமை பிடிக்காமல், தமிழகம் முழுவதும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானவர்கள், ஓபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர்.

அப்படி சென்றவர்களில் பி.ஆர்.ஜி. அருண்குமாரும் ஒருவர். அதுவும் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்து கோவைக்கு சென்றவர். அப்போதே, தனக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என உதறி தள்ளினார்.
தினகரன் அறிவிப்பு
இந்நிலையில், எம்எல்ஏ அருண் குமாரை கோவை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக, அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் நேற்று அறிவித்தார். இதனை கேள்வி கேட்டுள்ளார் அருண் குமார் எம்எல்ஏ.
ஓபிஎஸ் அணிதான்..
இதுபற்றி அருண்குமார் எம்எல்ஏ கூறும் போது, ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலாவின் தலைமை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். அதனால்தான் கூவத்தூரில் இருந்து தப்பி வந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
உதறிய பதவி
கூவத்துத்தூரில் இருந்து சசிகலாவின் செயல்பாடுகள் பிடிக்காமல்தான் தான் வந்த போதே கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் என்னும் பதவி தனக்கு தேவையில்லை எனக் கூறிவிட்டுத்தான் வெளியேறினேன் என்றும் அருண்குமார் எம்எல்ஏ கூறியுள்ளார். அப்போதே செய்தியாளர்களிடம் இது பற்றி தான் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரே தமாஷ்
இந்நிலையில், தன்னை நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும், தான், மக்கள் விரும்பும் இடத்தில் இருப்பதாகவும் எம்எல்ஏ தெரிவித்தார். மேலும், பதவியை எதிர்பார்த்து அதிமுகவில் தான் சேரவில்லை என்றும், கட்சி பதவியும், எம்எல்ஏ பதவியும் எனக்கு முக்கியம் இல்லை என்று கூறிய அருண்குமார், மக்கள் விருப்பம் எதுவோ, அதுவே தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications