இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
சென்னை: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 15-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதிமுகவின் கோட்டையாக இருந்தது ஆர்.கே.நகர் தொகுதி. ஆனால் அதிமுக தற்போது சசிகலா, ஓபிஎஸ், தீபா அணிகள் என 3 ஆக பிளவுபட்டு நிற்கிறது.
அதே நேரத்தில் திமுகவுக்கு இத்தொகுதியில் கணிசமான ஆதரவும் இருந்தது இல்லை. நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் இத்தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்பட்டு வருகிறது.
இத்தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முதலே சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்தது.