17 பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று கன்னியாகுமரியில் மோடி பிரச்சாரம்
குமரி: பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக குட்டி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை, ஓசூரில் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் அவர் இன்று கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று பிற்பகல் குமரிக்கு வரும் மோடி அம்மாவட்டத்தில் போட்டியிடும் 6 பாஜக வேட்பாளர்கள், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேருக்கு ஆதாரவாக பேச உள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பும் அவர் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். மோடியின் வருகையால் குமரி மாவட்ட பாஜகவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மோடியை வரவேற்று கன்னியாகுமரி முழுவதும் பாஜக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. மோடி கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கானோர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடியின் கூட்டம் நடக்கும் இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயரித்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.