மு.க.ஸ்டாலினுக்காக களத்தில் குதித்தது மோடியின் இணைய தள குழு?
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி இணைய தளங்களை நடத்துவதற்காக பிரதமர் மோடிக்காக இணையதளம் நடத்திய 10 பேர் கொண்ட குழு களம் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலின் போது திமுகவில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கியிருந்தது. ஆனால் லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைய ஸ்டாலினுக்கு பின்னடைவு ஏற்படத் தொடங்கியது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்த்துவிடுவதற்கான நடவடிக்கைகல் மும்முரமாகின. திமுகவை கருணாநிதி மீண்டும் கையிலெடுத்துக் கொண்டார்.

புதிய கலகக் குரல்
அதே நேரத்தில் மு.க. அழகிரியை கட்சியில் சேர்க்கக் கூடாது; ஊழல் வழக்கில் சிக்கிய ஆ.ராசா, கனிமொழி மற்றும் தயாநிதியையும் நீக்க வேண்டும்; திமுகவின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் எழுந்தன.

ஸ்டாலினின் போராட்டம்
ஆனால் இதை கருணாநிதி விரும்பவில்லை. இருப்பினும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து தம்மை முன்னிலைப்படுத்தி கட்சி தமது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதான தோற்றத்தை நிறுவ முயன்று வருகிறது.

சோசியல் மீடியாவில் ஸ்டாலின்
இதன் ஒருபகுதியாக சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் ஸ்டாலினை முன்னிறுத்துவதற்கான முனைப்பையும் அவரது தரப்பு மேற்கொண்டது. இதற்காக பிரதமர் மோடிக்காக இணையதளங்களில் பணியாற்றிய குழுக்களில் ஒன்றை ஸ்டாலின் தரப்பு 'கேட்ச்' செய்துள்ளது.

பிரசார வியூகம்
இக்குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினரின் அறிவுரைப்படியே சமூக வலைதளங்கள், இணையதளங்களில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறதாம்.

வெடிக்கும்?
இதனைத் தொடர்ந்து இந்த குரல் மெல்ல மெல்ல கட்சி நிர்வாகிகளிடத்திலும் எழுந்து ஸ்டாலின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் வழியாக வெடிக்கக் கூடும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications