எச். ராஜா மீது வளைத்து வளைத்து வழக்கு போடும் போலீஸ்.. ஏன் இந்த திடீர் வேகம்??
Recommended Video
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது ஆங்காங்கே வழக்குகள் பதிவாகிக் கொண்டு வருகின்றன. சில இடங்களில் பழைய புகார்களின் பேரிலும் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து வருகிறார்களாம். இதனால் பாஜகவினரே கூட குழப்பமாகியுள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த பிறகு எச். ராஜாவின் பேச்சும், செயலும் படு மோசமாகியுள்ளது. ஒரு அரசியல்வாதி போல இல்லாமல் பேசி வருகிறார் எச். ராஜா. கூடவே தனது பேச்சுக்களையும் நியாயப்படுத்தி வருகிறார்.
வைரமுத்துவின் தாயாரை விபச்சாரி என்றார். கனிமொழி பிறப்பு குறித்து இழிவாக பேசினார். உச்சகட்டமாக உயர்நீதிமன்றத்தை அசிங்கப்படுத்தினார், அதுவும் நடு ரோட்டில் வைத்து. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர்கள் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று மக்களிடையே கடும் கொதிப்பு நிலவுகிறது. மற்றவர்கள் இது போல பேசினால் உடனே கடுமையான நடவடிக்கை பாய்வதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.
திடீரென பாயும் வழக்குகள்
தற்போது எச். ராஜா மீது ஆங்காங்கே வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் சமீபத்திய விவகாரம் தவிர்த்து இதற்கு முன்பு எச். ராஜா மீது வந்த புகார்களையும் தூசி தட்டி எடுத்து வழக்குப் போட்டு வருகிறார்களாம். இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலையில் திடீர் வழக்கு
குறிப்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற திமுக பிரமுகர் போலீஸில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புகார் கூறியிருந்தார். அதில், எச். ராஜா தமிழகம் முழுவதும், ஜாதி, மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருந்தார். ஆனால் போலீஸார் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேடித் தேடி பதிவு
இந்த நிலையில் தற்போது இந்த புகாரின் பேரில் திடீரென போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவலும் சீனிவாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். ஏன் இந்த திடீர் நடவடிக்கை என்று திமுகவினருக்கும் தெரியவில்லை. திருவண்ணாமலை பாஜகவினரும் கூட குழம்பிப் போயுள்ளனர்.
பல்வேறு ஊர்களில்
தற்போது எச். ராஜா மீது பல்வேறு ஊர்களில் வழக்குப் போடப்பட்டு வருகிறது. அவர் பேசிய பேச்சுக்கள் தொடர்பாகவும், இதுதொடர்பாக வந்த புகார்களின் பேரிலும் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை எச். ராஜாவை நெருங்கும் எந்த நடவடிக்கையையும் போலீஸ் தரப்பு எடுக்கவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தப் படைகளைத் தேடும் நிலையே உள்ளது.
ஏன் எதற்காக
எச். ராஜா மீது இப்படி தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருவது எதற்காக என்று தெரியவில்லை. அதேசமயம், உயர்நீதிமன்றத்தில் எச். ராஜா மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், அப்போது தமிழக அரசு தரப்பில் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டவே இப்படி திடீரென வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.