அனல் பறக்கும் அரசு ஊழியர்கள் போராட்டம்... ஜெயலலிதா செல்லும் ரோட்டை மறித்து முற்றுகை!
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் 7வது நாளாக தீவிரமடைந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புக்கள் வெளிவராததால் முதல்வர் வருகின்ற பாதையில் போராட்டம் நடத்தினார்கள் அரசு ஊழியர்கள்.
கடந்த சில நாட்களாக தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் முழு வீச்சில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
அரசு ஊழியர்கள் தங்களது 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த ஒருவார காலமாக நடத்திவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 7 ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர்.
இன்று சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் என்பதால் தங்களுக்கான சாதகமான அறிக்கையை முதல்வர் வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்களின் போராட்டம் உச்ச கட்டத்தினை அடைந்தது.
இதனால், அரசு அலுவலக வளாகமான எழிலகத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும் எழிலகத்தின் பின்புறம் கூவம் நதியோரம் உள்ள ஒரு வாயிலை முட்டித்தள்ளி சாலைக்கு வந்தனர் அரசு ஊழியர்கள். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மூன்று இடங்களில் போலீஸார் தடுப்புகளை போட்டு தடுத்தும் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு அங்கிருந்து நேராக மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போலீஸாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், முதல்வர் செல்லும் கடற்கரை சாலையில் அரசு ஊழியர்களின் இந்த திடீர் சாலை மறியலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.