கூடங்குளம் அருகே குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள் !! மீனவர்களிடையே தொடரும் பதற்றம்!!!
நெல்லை : கூடங்குளம் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராமளான நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை செயலிழக்கச் செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மோதலின் போது, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சம்பவத்தின் போது 9 பேர் வரை பலியாகினர். இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற திருமண ஊர்வல நிகழ்ச்சியின் போது இரு தரப்பு மீனவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் ஏராளமான போலீசார் கூத்தங்குழி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் வீடுகளுக்குள் புகுந்தும் சோதனையிட்டனர்.
அப்போது 3 க்கும் மேற்பட்ட இடங்களில் குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 250 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவையனைத்தும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க செய்யப்பட்டன. கூத்தங்குழியில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்.