சென்னையை வெளுக்கும் அனல்காற்று.. வாகன ஓட்டிகள் அவதி!
சென்னையில் வீசி வரும் அனல்காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: அனல்காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். தகிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திர நாளில் வதைப்பது போல வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் சென்னையில் பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. கொளுத்தும் வெயிலுடன் அனல்காற்றும் வீசி வருவதால் மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவித்து வருகின்றனர்.

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்
வெப்பம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கூடுதல் வெப்ப நிலை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வழக்கமான வெப்ப நிலையைவிட 5 முதல் 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

உள்மாவட்டங்களில்
உள்மாவட்டங்களில் வழக்கமான வெப்ப நிலையைவிட 7 முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக வேலூர் அருகே காவேரிப்பாக்கத்தில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications