இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் மக்களே!
அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழக அரசு கட்டாயமாக்கியது. இதனை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது தனி நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
மோட்டார் வாகன சட்டம்
இந்நிலையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மோட்டார் வாகன சட்டம் 130படி அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் காட்ட வேண்டும் என்று உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் 2-ஆவது இடம்
மேலும் சாலை விபத்துகளில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளதால் இதனை கட்டுப்படுத்தவே அரசு இந்த உத்தரவை பிறப்பித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை வெள்ளிகிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் முடிவடைந்த நிலையில்...
அப்போது தமிழக அரசு தங்கள் தரப்பு பதிலை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அசல் வாகன உரிமம் வைத்திருக்க கட்டாயமில்லை என்று நீதிமன்றம் விதித்த தடை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தத் தடையை நீட்டிக்க தலைமை நீதிபதி அமர்வு திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
கட்டாயம்
எனவே, இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கொண்டு செல்வது கட்டாயமாகியுள்ளது. அரசு தாக்கல் செய்யும் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட முடிவை அறிவிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறிவிட்டது.
சிறை தண்டனை
இதனால் அந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லாதவருக்கு ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.