மவுலிவாக்கம் விபத்து: விசாரணைக் கமிஷனுக்கு ரகுபதியை விட்டால் வேற ஆளே இல்லையா?- ஹைகோர்ட்
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து விசாரிக்க நீதிபதி ரகுபதியைத் தவிர வேறு யாருமே கிடைக்கவில்லையா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரும் 28 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், "சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டடப் பணியில் 300 குடும்பங்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், 61 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் தரைதளம் தோண்டப்படவே இல்லை. அப்படி தோண்டிருந்தால் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டிருக்கும். அதிகாரிகளையும், அமைச்சர்களையும் காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு முயற்சி செய்கிறது. எனவே கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு திங்கள்கிழமை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, "மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் ரகுபதியிடம் இந்த விவகாரத்தை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன. மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் பொறுப்பை அவர் முறையாக நிறைவேற்றியிருக்கிறாரா. இதுவரை தீர்க்கப்பட்ட வழக்குகள் எவ்வளவு. நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு என்பது குறித்து வரும் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ரகுபதியை விட்டால் வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் வரும் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.