எடப்பாடியார் அமைச்சரவையில் முக்குலத்தோர், கவுண்டர் சமுதாய அமைச்சர்கள் தொடர்ந்து ஆதிக்கம்!
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் முக்குலத்தோர் மட்டும் கவுண்டர்கள் சமுதாய அமைச்சர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையிலும் முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தின் ஆதிக்கம் தொடருகிறது.
2016 சட்டசபை தேர்தலில் வென்று ஜெயலலிதா முதல்வரானார். அவரது அமைச்சரவையில், முக்குலத்தோர் 9 பேர், வன்னியர்கள்- 5; கவுண்டர்கள் - 5; தலித்துகள்- 3 இதர ஜாதியினர் 11 பேர் என இடம்பெற்றிருந்தனர்.
இதனிடையே டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார். அவரைத் தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.
முந்தைய ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் அப்படியே தொடர்ந்தனர். இருந்தபோதும் அப்போது அமைச்சரவையில் ஜாதி ரீதியாக சரிசமமான பிரதிநித்துவம் தேவை என்ற குரல்கள் எதிரொலித்தன.
ஏனெனில்
தலித் எம்.எல்.ஏக்கள் 31 பேர் .. 3 பேர் அமைச்சர்கள்
வன்னியர் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்... 5 அமைச்சர்கள்
கவுண்டர் எம்.எல்.ஏக்கள் 28 பேர்.... 5 அமைச்சர்கள்
முக்குலத்தோர் எம்.எல்.ஏக்கள் 20 பேர்- 9 அமைச்சர்கள்
இதர ஜாதியினர் 35 பேர்.... 10 அமைச்சர்கள்
இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கவுண்டர் பிரதிநிதித்துவம் 6 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த மாற்றமும் எடப்பாடியார் அமைச்சரவையில் இல்லை.
இதனால் எடப்பாடியார் அமைச்சரவையிலும் முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தின் ஆதிக்கமே தொடருகிறது.