முல்லைப் பெரியாறு அணை 142 அடியை நெருங்கியது: பென்னிகுவிக் மண்டபத்தில் பொங்கல் வைத்த விவசாயிகள்
தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கியதை அடுத்து தேனி மாவட்ட விவசாயிகள் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரளா அரசு சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கடந்த 1979ஆம் ஆண்டு முதல் இந்த அணையில் 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே சாகுபடி பரப்பளவு குறைந்தது. அப்போது முதல் அணையில் 152 அடி தண்ணீரை தேக்கும் உரிமைக்காக தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் பலனாக முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
142 அடி வரை தண்ணீரை தேக்க மத்திய அரசின் பிரதிநிதி தலைமையில் தமிழக, கேரளா அரசு பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அணையின் ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டன.
கை கொடுத்த மழை
வடகிழக்கு பருவமழையினால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நவம்பர் 1-ஆம் தேதி 136 அடியை தாண்டியது.
141 அடி
சனிக்கிழமையன்று 141 அடியை எட்டியது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழை குறைந்த காரணத்தினாலும் அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
விவசாயிகள் கொதிப்பு
இதனை அறிந்த விவசாயிகள் கேரள அரசின் நெருக்கடியால் தான் தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிந்து விட்டனர். இதனால்தான் தண்ணீரை 142 அடிவரை தேக்காமல் திறந்துவிடுகின்றனர். நீர்வரத்து கணக்குப்படி பார்த்தால் அணை 142 அடியை எட்டி இருக்க வேண்டும். இதில் ஏதோ குளறுபடி உள்ளது என்று விவசாயிகள் ஆவேசம் அடைந்ததோடு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இதனை கேள்விப்பட்டு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே தண்ணீர் திறப்பு அளவை குறைக்க நடவடிக்கை எடுத்தனர். இன்று காலை அணைக்கு 1125 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் 900 கனஅடி நீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் எதிரொலியால் தற்போது தண்ணீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. நீரின் வரத்து இதே அளவு நீடித்தால் அணையின் நீர்மட்டம் இன்று நள்ளிரவுக்குள் (17-ந் தேதி) 142 அடியை தாண்டிவிடும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
பொங்கல் வழிபாடு
முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் முல்லைப்பெரியாறு அணை மீட்பு குழுவினர், வக்கீல்கள் சங்கத்தினனர் கலந்து கொண்டனர்.
கேரளா அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே அணையின் நீர்மட்டம் தற்போது 142 நெருங்கி வரும் நிலையில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் ஆலோசனை நடத்தினார். அப்போது, அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றுவது, கரையோர மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
குவிந்த செய்தியாளர்கள்
அணையின் நீர்மட்டம் தற்போது 141 அடியை தாண்டியுள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், தமிழக செய்தியாளர்களும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் குவிந்துள்ளனர். இதற்கிடையே தேக்கடி பகுதிக்கு வந்த கம்பம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோசமிட்டனர்.
எம்.எல்.ஏ அதிர்ச்சி
இதனை அறிந்த பீர்மேடு எம்எல்ஏ பிஜிமோல் திடீரென முல்லைப் பெரியாறு அணை பகுதியான தேக்கடி பகுதிக்கு வந்தார். இதனைக் கண்ட பாதுகாப்புக்கு நின்ற போலீசார் எம்எல்ஏவிடம், அணையின் நீர்மட்ட விவரத்தை கூறினர். விரைவில் 142 அடியை எட்டும் என்று தெரிவித்தனர்.
152 அடியாக உயர்த்த கோரிக்கை
அப்போது, அவர்கள், கம்பம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோசமிட்ட வீடியோ காட்சிகளை எம்எல்ஏவுக்கு காட்டினர். அதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர், கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ஜோசப்வுக்கு தகவல் கொடுத்தார். ஜோசப்பும் அணையை பார்வையிட வருவார் என்று தெரிவித்த பீர்மேடு எம்எல்ஏ, மாலை 3 மணி அளவில் மீண்டும் ஒருமுறை அணையின் நீர்மட்டத்தை பார்வையிட்டு சென்றார்.