எரித்துக் கொல்லப்பட்ட கண்டக்டருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: ஜெ. உத்தரவு
சென்னை: ஓடும் பேருந்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட தனியார் பேருந்து கண்டக்டரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது:
20.5.2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, சில விஷமிகள் பேருந்தில் ஏறி நடத்துநர் செல்வா என்பவரிடம் தகராறு செய்ததின் பேரில் அவர்கள் தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
மேற்படி பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட அந்த நபர்கள் பின் தொடர்ந்து வந்து பேருந்து நடத்துநர் செல்வாவிடம் மீண்டும் தகராறு செய்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.5.2014 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த நடத்துநர் செல்வாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளேன். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.