நெல்லை, தூத்துக்குடியில் தொடர்ந்து விழும் கொலைகள்.. பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் கொலை சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
பெரும்பாலான கொலைகள், பழிக்கு பழி, கள்ளகாதல், நடத்தை சந்தேகம் போன்ற காரணங்களால் நடக்கிறது. இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
சேரன்மகாதேவியில் தங்கபாண்டி கொலை
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
தூத்துக்குடியில் அம்பிகாபதி கொலை
இது போல் தூத்துக்குடி கிருஷ்ணாபுரம் 2வது தெருவை சேர்ந்த அம்பிகாபதி என்பவர் பெண் கொலைக்கு பழிக்கு பழியாக வெட்டி கொல்லப்பட்டார். தேனி மாவட்டம் சின்னமானூரை சேர்ந்த அருண்பாண்டி என்பவர் எட்டயபுரம் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கடையநல்லூரில் மாணவர் கொலை
மேலும் மேல கடையநல்லூரை சேர்ந்த ஐடிஐ மாணவர் முருகன் கொலை செய்யப்பட்டார். எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் ரவுடி முகேஷ் குமார் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பீதியில் மக்கள்
இந்த சம்பவங்களால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். போலீசார் போதிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் அதிகரித்து வருவதாக அவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
உளவுத்துறை ஆய்வு தேவை
கடந்த காலங்களில் உளவு துறையினர், தனிபிரிவு போலீசார் என அனைவரும் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். ஆனால் தற்போது அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர் கொலையால் பொது மக்கள் வெளியே செல்லவே பயத்தில் இருந்து வருகின்றனர்.