நிழல் அரசியல்... உறுப்புதானம் - நடராஜன் சந்தித்த சர்ச்சைகள்
திரைமறைவு அரசியல் நடத்தியதில் தொடங்கி உடல் உறுப்பு தானம் பெற்றது வரை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது நடராஜன் வாழ்க்கை
சென்னை: திரைமறைவு அரசியல் வாழ்க்கை நடத்தினாலும் பல சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்றுள்ளார் நடராஜன். சமீபத்தில் உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடு நடந்ததாகவும் சசிகலா கணவர் நடராஜன் மீது புகார் எழுந்துள்ளது.
ஜெயலலிதாவையும் அவருக்கு பின்னால் சசிகலாவையும் பின்னால் இயக்கிய நிழல் மனிதர் நடராஜன்.
கடந்த 30 ஆண்டு கால நிழல் அரசியல் வாழ்க்கையும், சர்ச்சைகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் ஆகிய மூவரின் ரகசியங்களும் புதைக்கப்பட்டு விட்டது.
ஜெயலலிதா மரணமடைந்த துக்கத்தில் அதிமுக தொண்டர்கள் இருந்த போதே 2017ஆம் ஆண்டு வழக்கமான பாணியில் பொங்கல் விழா கொண்டாடி பலரது சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டார் நடராஜன்.
மதுரை செரீனா
2003ம் ஆண்டு செரீனாவும், அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்து வந்தது. செரீனா, நடராஜனின் நட்பு வட்டத்தில் இருந்தவர் என்று அப்போது கூறப்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் 2006ம் ஆண்டு இந்த வழக்குகளிலிருந்து விடுபட்டார் செரீனா.
கைதான நடராஜன்
ஜெயலலிதாவை பின்னால் இருந்து இயக்குகிறார் என்று கூறப்பட்ட நடராஜன், கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானார். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
செல்போன் இல்லை
உளவுப் பிரிவு நான் செல்போனில் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது அதனால் நான் இனிமேல் செல்போன் பயன்படுத்த மாட்டேன் என்றார். இனி நான் கார் பயன்படுத்த மாட்டேன். மக்களோடு மக்களாக பேருந்திலேயே பயணிக்கப் போகிறேன் எனச்சொல்லி, தான் பயன்படுத்திய கார்களை மேடையிலேயே ஏலம் விட்டு பின்னர் நடந்தே வீட்டுக்குப் போனார்.
கைதான நடராஜன்
தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இலங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவுச் சின்னம் உலக தமிழ் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் சிலை அமைக்கும் பணியை நடராஜன் கொடுத்ததாகவும் சம்பளம் கொடுக்காமல் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக ஹுசைனி புகார் கொடுக்கவே குற்றாலத்தில் பதுங்கியிருந்த நடராஜனை போலீசார் கைது செய்தனர்.
கலை இலக்கிய விழாவில் அரசியல்
ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சையில், 'தமிழர் கலை இலக்கியத் திருவிழா' எனும் பெயரில் பொங்கல் விழாவினை விமரிசையாக நடத்துவார். மூன்று நாள்கள் மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், நடிகர், நடிகைகள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கூட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்பார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, பட்டி மன்றம், வெளிநாட்டு அழகிகளின் நடனம் அறுசுவை விருந்துடன், அதிரடியான அரசியல் பேச்சு என கலகலப்பாகவே நடத்துவார் நடராஜன். 2011 டிசம்பரில் அ.தி.மு.க.விலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்ட அடுத்த மாதம் நடந்த பொங்கல் விழாவில், 'இதுவரை கட்டுண்டோம், பொறுத்திருந்தோம். இனி, கட்டுப்பாடற்ற நடராஜனாக ஆகிவிட்டேன். சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் என்றார்.
அரசியல் பேசிய நடராஜன்
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிகம் அரசியல் பேசாத நடராஜன் ஜெயலலிதா மரணமடைந்து அதன் ஈரம் காய்வதற்கு முன்பு சமாதியிலேயே அரசியல் பேசினார். அதிமுகவின் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட அவசியம் இல்லை. மிகுந்த பலத்தோடு அதிமுக இருக்கிறது என்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏதும் இல்லை என்றார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா போட்ட விதையை யாராலும் திருடி விட முடியாது. கட்சியை சாதாரண கடைநிலை தொண்டர் கூட கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்.
பாஜகவிற்கு எதிரான பேச்சு
ஜெயலலிதா மரணமடைந்த துக்கத்தில் அதிமுக தொண்டர்கள் இருந்த போதே 2017ஆம் ஆண்டு வழக்கமான பாணியில் பொங்கல் விழா கொண்டாடி பலரது சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டார் நடராஜன். நேரடி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என கருத்தும் கேட்டார். பொங்கல் விழாவில், அ.தி.மு.க.வை உடைக்க சதி நடக்கிறது. என்ன செய்தாலும் உங்களால் அதிமுகவை உடைக்க முடியாது. ஆட்சியையும் உடைக்க முடியாது என்று பாஜகவிற்கு எதிராக பேசினார். நாங்கள் குடும்ப அரசியல்தான் நடத்துவோம் என்று அதே மேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
உறுப்பு தானம் பெற்றதிலும் சர்ச்சை
நடராஜன் ஆணவமாக பேசுகிறார் என்று அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. நடராஜன் பேசியதன் ஈரம் காயும் முன்பே பிப்ரவரி 14ஆம் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சிறை சென்றார் சசிகலா. அரசியல் வாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்கினார் நடராஜன். உடல் உறுப்புகள் செயலிழக்கவே கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விதிகளை மீறி உடல் உறுப்புகளை தானமாக பெற்றார் என்ற சர்ச்சை எழுந்தது. திரைமறைவு அரசியல் நடத்தியதில் தொடங்கி உடல் உறுப்பு தானம் பெற்றது வரை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது நடராஜன் வாழ்க்கை