உச்சநீதிமன்றம் கண்டித்த பின்னரும் பதவி விலக பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மறுப்பு
சென்னை: உச்சநீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்த பின்னரும் கூட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக மறுத்து வருகிறார்.
6வது ஐபிஎல் போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ததது.
அந்த அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங்கில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் முத்கல் கமிட்டி அறிக்கை மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஐபிஎல் பிக்ஸிங் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. சீனிவாசன் ஏன் பதவியில் ஒட்டியபடி இருக்கிறார்? அப்படி சீனிவாசன் பதவி விலகவில்லை எனில் அதற்கான உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்றும் கூறியது.
அத்துடன் வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் வெளியேற்றிவிட முடியாது.. என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் சிவ்லால் யாதவும், உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருப்போம் என்று கூறியிருக்கிறார். அதாவது சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கட்டும் அப்போது பார்க்கலாம் என்கிற அடிப்படையில் சிவ்லால் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பலரும் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை மீண்டும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்து உத்தரவு பிறப்பிக்கக் கூடும் எனத் தெரிகிறது.