லோக்சபா தேர்தலில் போட்டியில்லை- ஜெயலலிதா பிரதமர் ஆனால் வரவேற்பேன்: சீமான்
புதுச்சேரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என்றும், ஜெயலலிதா பிரதமராக வந்தால் அதை வரவேற்போம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புதுவை சென்றார். நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் கட்சி போட்டியிடுவது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
போட்டி இல்லை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது. அதே சமயம் நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் மாட்டோம். வரும் 2016ம் ஆண்டு தமிழகம், புதுவையில் நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.
காங்கிரஸ், பாஜக
இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. ஈழத்தில் போர் நடத்தி அங்குள்ள தமிழர்களை கொன்றது காங்கிரஸ் கட்சி. 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒரு மாதம் முடக்கியது பாஜக. ஆனால் அண்டை நாட்டில் வசிக்கும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயற்சி செய்யவில்லை. இவர்கள் எல்லாம் இலங்கை தமிழர் பிரச்சனையை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஜெயலலிதா
கச்சத்தீவு இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பரப்பு ஆகும். கட்சத்தீவை மீட்க வேண்டும். இந்திய பிரதமராக ஒரு தமிழர் வந்தால் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். தமிழர் பிரதமர் என்றால் ஜெயலலிதா பிரதமராக வந்தால் நான் வரவேற்பேன்.
விஜயகாந்த்
விஜயகாந்த யார் அதிக இடம் மற்றும் பணம் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி வைப்பார். அவர் நடத்துவது கட்சி அன்று தனியார் நிறுவனம்.
தமிழக கட்சிகள்
கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள கட்சிகள் மாநில நலன் என்றால் ஒன்று கூடி விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகளோ அதை வைத்து அரசியல் நடத்துகின்றன. மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நிலை உருவாக வேண்டும் என்றார்.